சனி, 13 பிப்ரவரி, 2010

காசி ஆனந்தன் கவிதைகள்

முரண்

இறைவனின் வாகனம் என்றான் 
நாயை
அவதாரம் என்றான் 
பன்றியை
இறைவனே என்றான் 
குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே! 
பன்றியே! 
குரங்கே!

நாற்காலி

இங்கே 
வேறுபாடு 
அதிகம் இல்லை
நாற்காலிக்கும் 
கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்

ஞானம் பெற்றது
நீ - உன்மண்ணில்
பள்ளிக் கூடங்கள் 
கட்டப்பட்டதால்

நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் 
இடிக்கப்பட்டதால்.

பாடம்

புரட்சியாவது 
வெங்காயமாவது
என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் 
கண்ணீரை வாங்கும் 
வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் 
புரட்சி

கோயில்

செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது 

அழுக்கு.

தளை

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்

வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-

வெட்கம் கெட்ட வில்

பெண்மை

தெரிவது உனக்கு
அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்

வெறி

எரியவில்லை அடுப்பு 
சேரியில்.

போராடினோம்…

எரிந்தது அடுப்பல்ல-
சேரி

வீரம்

உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாளிக்கு .

சாமி

எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா 

ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

நிழல்

எதிரிகளால் அழிக்கப்பட்டன 
எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்

இன்று-
போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்

இது உயிருக்கு வந்த 
சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்

போர்

ஊரில் உங்கள் 
சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் 
ஊர்.

உறுத்தல்

இரவெல்லாம் 
விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்த
பனைபபாய்…

வாங்கினேன்

உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்

இவன் 
பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.

காகம் 
இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்….

மானம்

உன் கோவணம் 
அவிழ்க்கப்பட்டதா?

அவன் 
கைகளை 
வெட்டு

கெஞ்சி 
கோவணம் 
கட்டாதே

அம்மணமாகவே 
போராடு.

அறுவடை

திரைப்படச்
சுவரொட்டியை

தின்றகழுதை 
கொழுத்தது

பார்த்த கழுதை 
புழுத்தது

மந்தை

மேடை

"தமிழா!
ஆடாய் 
மாடாய்
ஆனாயடா…நீ "
என்றேன்

கைதட்டினான்

பெண்

ஏடுகளில் 
முன்பக்கத்தின்
அட்டையில்

வீடுகளில் 
பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

கோடை

தங்க வளையலைக்
கழற்றி
போராளியிடம் தந்தாள்

"செலவுக்கு
வைத்துக்கொள்

உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு 
வளையல்."

திமிர்

வேலைக்காரன் மேல் 
பாய்ந்தார்

."நாயே பீட்டரை கவனித்தாயா?"

இவர் வீட்டில் 
பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன

கொலை

ஒரு நாள் வாழ்க்கை 
பூவுக்கு…

விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி 
தனக்கு

அடக்கம்

அடக்கம் 
செய்யப்படுகிறோம்…

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி

மாந்த நேயம் பேசின 
அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன 
கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கிறது 
அமைதி.

அடி

கலையை 
கலைஞனை
போற்றிய நாடிது 
என்கிறாய்…

காலம் 
காலமாய்

பறையை 
பறயனை 
தாழ்த்திய நீ.
-  காசி ஆனந்தன்.

திங்கள், 1 பிப்ரவரி, 2010

பிரதானச்சாலை

அந்தப் பிரதானச்சாலை
பிரமாதமாய் தெரியவில்லை
உன்னிடமிருந்து
விடைப்பெற்று செல்கையில்
விடைபெறாமல் இன்னும்
செதுக்கி கொண்டே
துகள் தூவுகின்றன
நீ உதிர்த்த வார்த்தைகள்
பிரமாதமாய் தெரிந்தது
பிரதானச்சாலை எங்கும்
மொழிகளில்லா வலியாய்
உனது பேச்சுகள் மட்டும் ...

வார்த்தைகள்

எந்த நேரமும்
அறுந்து விழக்கூடிய
மெல்லிய இழையில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகள்

அர்த்தங்கள் உணர்த்தும்
மொழி வசீகரிக்கிறது

தற்செயலாய் உதிரும் அவை
மாறா வடுவை உண்டாக்கவோ
அன்றி, ஆறாப் பழங்காயங்களை
ஆற்றவோ வலிமையுடையன

அவற்றில் சில கீறிப் பிளந்து
விளைவிக்கின்றன
புதிய முளைகளை
வேறு சில
புதைப்பிக்கின்றன
உயிர்களை

- தாரா கணேசன்

ஒரு பொழுது

ஒரு பொழுது
==============

எந்தவொரு எதிர்பார்ப்புமற்று
நானிருந்த ஒரு மழைவேளையில்
முன்னொரு தினம்
நான் ப‌ரிச‌ளித்திருந்த‌ உடைய‌னிந்து
நீயாக‌ என் வாச‌ல் வருவதென்பது
தற்செயலாய் நிகழ்கிறது

வேண்டிய‌தென்ன‌வொ
ஒரு பார்வையோ
ஒரு புன்ன‌கையோ
ஒரு க‌வ‌னமோ
ஒரு இனிய‌ சொல்லோ
அல்ல‌து போலியாக‌வேனும் கொஞ்ச‌ம் பிரிய‌ங்கள் ம‌ட்டுமே.
ஆயினும் பார்வையை உன் மீதிருந்து விலக்கி
சில நொடிகள் மௌன‌ம் கொள்கிறேன்

சற்று யோசித்து
வெறுமெனத் திருப்பிய‌‌னுப்ப‌ ம‌ன‌மின்றி
வாவென உள் அழைக்குமுன்னே
நீயாக‌ உள் நுழைகிறாய்
இம்ம‌ழைக்கால‌த்தினும் இத‌மான‌ பார்வைக‌ளுட‌ன்
பேசுகின்றாய்
புன்ன‌கைகின்றாய்
புருவம் உயர்த்துகின்றாய்
ஏனோ திரும்ப‌வும் மௌனம் மட்டுமே ப‌ட‌ர்கின்றதென்னில்

ந‌ம் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டியும்
நான் ம‌கிழ்வோடிருக்க‌ வேண்டியும்
செந்தாம‌ரைக‌ளும் அக‌ல் விள‌க்கொளியும் நிறைந்த‌
வெங்க‌ல‌த்த‌ட்டில் பிரியங்களைத்தூவி
ப‌ரிவுட‌ன் நீட்டுகின்றாய்

விழியோரம்
காரண‌மற்று திரள்கிறது கண்ணீர்

ச‌ல‌ன‌மேயின்றி
விடைகொடுத்துச் செல்லும் உற‌வுகளுக்கிடையில்
உன‌திந்த‌ அன்பு ஒருவிதச் சிலிர்ப்பை ஏற்ப‌டுத்தினாலும்
நானிதை பெற்றுக்கொள்ள‌
இப்பொழுது த‌யாராக‌ இல்லை.

- நளன்

எதிர்பார்ப்பு

நீ இப்படி இருக்கலாமென நானும்
நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும்
நினைப்பதில் தவறொன்றுமில்லை
எதிர்பார்ப்பதுதான்
மனித இயல்பு என்றானப்பின் !


- நளன்

ஆதரவு

காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதரிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் !


- நளன்

புறக்கணிப்பு

எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை.

-சல்மா.

உண்மையாக நேசி.....

என் இதயம்
வெள்ளக் காகிதம் போல
அதில் எழுதியதை விட
கசக்கி எறிந்தவர்கள்தான் அதிகம் என்றேன்
நான் எழுதுகிறேன் என்றாய்
எழுதவும் செய்தாய்
உன் உணர்வுகளை, உளறல்களை
உன் தேடல்களை...
எனக்கே என்று எண்ணி
நான் அகந்தையுடன் இருந்தேன்
இப்போது தான் புரிந்தேன்
எனக்கில்லை என்று
அவனையாவது உண்மையாக நேசி.....