திங்கள், 1 பிப்ரவரி, 2010

வார்த்தைகள்

எந்த நேரமும்
அறுந்து விழக்கூடிய
மெல்லிய இழையில்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
வார்த்தைகள்

அர்த்தங்கள் உணர்த்தும்
மொழி வசீகரிக்கிறது

தற்செயலாய் உதிரும் அவை
மாறா வடுவை உண்டாக்கவோ
அன்றி, ஆறாப் பழங்காயங்களை
ஆற்றவோ வலிமையுடையன

அவற்றில் சில கீறிப் பிளந்து
விளைவிக்கின்றன
புதிய முளைகளை
வேறு சில
புதைப்பிக்கின்றன
உயிர்களை

- தாரா கணேசன்

ஒரு பொழுது

ஒரு பொழுது
==============

எந்தவொரு எதிர்பார்ப்புமற்று
நானிருந்த ஒரு மழைவேளையில்
முன்னொரு தினம்
நான் ப‌ரிச‌ளித்திருந்த‌ உடைய‌னிந்து
நீயாக‌ என் வாச‌ல் வருவதென்பது
தற்செயலாய் நிகழ்கிறது

வேண்டிய‌தென்ன‌வொ
ஒரு பார்வையோ
ஒரு புன்ன‌கையோ
ஒரு க‌வ‌னமோ
ஒரு இனிய‌ சொல்லோ
அல்ல‌து போலியாக‌வேனும் கொஞ்ச‌ம் பிரிய‌ங்கள் ம‌ட்டுமே.
ஆயினும் பார்வையை உன் மீதிருந்து விலக்கி
சில நொடிகள் மௌன‌ம் கொள்கிறேன்

சற்று யோசித்து
வெறுமெனத் திருப்பிய‌‌னுப்ப‌ ம‌ன‌மின்றி
வாவென உள் அழைக்குமுன்னே
நீயாக‌ உள் நுழைகிறாய்
இம்ம‌ழைக்கால‌த்தினும் இத‌மான‌ பார்வைக‌ளுட‌ன்
பேசுகின்றாய்
புன்ன‌கைகின்றாய்
புருவம் உயர்த்துகின்றாய்
ஏனோ திரும்ப‌வும் மௌனம் மட்டுமே ப‌ட‌ர்கின்றதென்னில்

ந‌ம் ந‌ட்பு தொட‌ர‌ வேண்டியும்
நான் ம‌கிழ்வோடிருக்க‌ வேண்டியும்
செந்தாம‌ரைக‌ளும் அக‌ல் விள‌க்கொளியும் நிறைந்த‌
வெங்க‌ல‌த்த‌ட்டில் பிரியங்களைத்தூவி
ப‌ரிவுட‌ன் நீட்டுகின்றாய்

விழியோரம்
காரண‌மற்று திரள்கிறது கண்ணீர்

ச‌ல‌ன‌மேயின்றி
விடைகொடுத்துச் செல்லும் உற‌வுகளுக்கிடையில்
உன‌திந்த‌ அன்பு ஒருவிதச் சிலிர்ப்பை ஏற்ப‌டுத்தினாலும்
நானிதை பெற்றுக்கொள்ள‌
இப்பொழுது த‌யாராக‌ இல்லை.

- நளன்

எதிர்பார்ப்பு

நீ இப்படி இருக்கலாமென நானும்
நான் இப்படி இருக்கவேண்டாமென நீயும்
நினைப்பதில் தவறொன்றுமில்லை
எதிர்பார்ப்பதுதான்
மனித இயல்பு என்றானப்பின் !


- நளன்