சனி, 9 மே, 2009

கண்ணாடி

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை
உடைத்தெறியவே
விரும்புகிறேன்...

ஆனாலும்
உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு
செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்.

உன்னோடும் இருந்திருக்கிறேன் !

எப்போதும் கனவுகளில்
பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட
உன்னோடும் இருந்திருக்கிறேன் !

கண்ணம்மா என் காதலி - 1

சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ! - இதுபார்,
கன்னத்து முத்தமொன்று!

- பாரதியார்.