சனி, 9 மே, 2009

கண்ணம்மா என் காதலி - 1

சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி, - கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்களடீ!

சோலைமல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக்கட லலையே - உனது
நெஞ்சி லலைகளடீ!
கோலக் குயிலோசை - உனது
குரலி னிமையடீ!
வாலைக் குமரியடீ! - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்புசெய்வோம்;
காத்திருப் பேனோடீ! - இதுபார்,
கன்னத்து முத்தமொன்று!

- பாரதியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக