சனி, 14 நவம்பர், 2009

காதலும் கோபமும்

உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
உன் வெட்கத்தைப் போலன்றி
சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
உன் கோபம்.


அந்த ஒரு நொடி
என் காதல் காயப்படுவதெல்லாம்
உன் கோபங்களுக்கு புரிவதில்லை.


ஆனாலென்ன ?
மழையாக விழுந்தாலும்
வெள்ளமாக அடித்தாலும்
கடலாக அணைத்தாலும்
நிலத்துக்கு நீர் நீர் தான் !


ஊடலில் பிரிந்தாலும்
பேசாமல் மௌனித்தாலும்
கோபமாக முறைத்தாலும்
எனக்கு நீ நீ தான் !


துயரம் தானென்றாலும்
உன் கோபங்களை வரவேற்க
என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.


ஒரு மௌனம்
ஒரு மன்னிப்பு
ஒரு சின்னக் காதல்
எப்பொழுதும் இவை மட்டுமே
என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.


கோபங்கள் களையப்பட்டு
நிர்வாணமான உன் மனம்
காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :
இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா


அடிப்போடி...

உனக்கிருக்கும் காதலுக்கு
நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம் !

- அருட்பெருங்கோ

நன்றி : http://blog.arutperungo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக